செவ்வாய், 8 ஜூலை, 2014

கேள்விக் கனல்கள்

கேள்விக் கனல் 
              காலம் இப்போதெல்லாம் மிக விரைவாக முன்னேறுகிறது.  நேற்று நான் ஓர் இடுகை இட்டு முடிந்த பின் தான் எவ்வளவு நிகழ்வுகள்.  இது போட்டி யுகம். விரைந்து செயல்பட வேண்டும். நான் ரொம்ப சொங்கி. இதற்குப் பல  காரணங்கள் அடுக்குவது கூட எனது சோம்பேறித்தனத்தையே வெளிப்படுத்துகின்றன.  இடுகைக்கான பின்னோட்டத்திற்குப் பதில் தரக் கூட எனக்குக் கூடுவதில்லை.  இதோ இப்போது அவசர அவசரமாகத் தேர்வு அறையில் தேர்வெழுதும் மாணவனாக நான் தடுமாறித் தடுமாறித் தட்டச்சு செய்கிறேன்.  அவசரத்துல அண்டாவிலும் கை நுழையாது... சரிதான்.

        நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது என் தமிழாசிரியர் சொன்ன கருத்து: “ஜெயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியை அரங்கேற்றம் செய்த போது ஒவ்வொரு பாட்டிலும் லயித்துப் போன அரசன் ஒவ்வொரு பொன் தேங்காய் பரிசாகத் தந்தான்”. இப்போது எதற்கு இந்த கருத்து என்று நீங்கள் கேட்கலாம்.  தற்போதெல்லாம் போட்டித் தேர்வில் கேட்கப்படுகின்ற வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் இப்படிப் பொன் தேங்காய் வாரி வழங்கப் படுகின்றதோ எனும் ஐயம் எழுகின்றது. கடந்த மாதம் நடைபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர்க்கான முதனிலைத் தேர்வை நானும் எழுதினேன். வினாக்கள் ஒவ்வொன்றும் தெரிந்தது தான். ஆனால் பதில் தெரிவதில் தான் தடுமாற்றம்,  “அட எங்க இருந்து தான் இப்படி கேள்வி எடுப்பாங்களோ தெரியலை” என்ற குரலைப் பரவலாகத் தேர்வு மையத்தில் கேட்க முடிந்தது.

         இன்று காலையில் எனது செல்பேசி மூலமாக வளரும் கவிதை வலைப் பக்கத்தை உலாவி வரும் போது, நேற்றைய இடுகையில் ஐயா அவர்கள் பல வினாக்களை எழுப்பியுள்ளார்.  வினாக்கள்... தெரியும்....ஆனால் தெரியாது என்று நக்கல் அடிப்பது போல இருக்கின்றன.  ஒரு வேளை முத்துநிலவன் ஐயா தான் இது போன்ற வினாக்களின் ஊற்றோ எனும் எண்ணம் எழுந்தது. நமது தமிழ் மொழியில் நாம் அறிந்து கொள்ளவேண்டிய அவசியமான வினாக்கள் சார்ந்த பதிவு மிக அருமை.  இந்த வினாக்கள் புதுக்கோட்டையில் நான் பணிபுரிந்த போது ஐயா அவர்களின் தமிழாசிரியர்கள் கருத்தாய்வுக்  கூட்டத்தில்  கலந்து கொண்ட போதே அறிந்து கொண்டேன். முத்துநிலவன் ஐயா அவர்கள் வினாக்களுக்கான விடைத் தேடலை ஜோசப் விஜு ஐயா மற்றும் எனது வலைப் பக்கத்தில் பார்க்குமாறு செய்து விடை பெற்றுள்ளார்.  ஆனால் ஜோசப் ஐயா வேகத்தில் சூரிய ஒளியை மிஞ்சிவிட்டார். இதோ இப்போது தான் எனது வலைப்பக்கத்தில் தட்டெழுத்துத் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

1.    குமரியில் உள்ள வள்ளுவர் சிலையின் உயரம் என்ன?
            --133அடி
2.    சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் எது?
---நன்னூல்.
3.    அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்வரி இடம்பெற்ற நூல் எது?
--கம்பராமாயணம்.
4.    பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல் எது?
--பரிபாடல்.
5.    தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் பழந்தமிழ் நூல் எது?
--புறநானூறு.
6.    ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்று கூறியவர் யார்?
---திருமூலர்
7.    சாதி இரண்டொழிய வேறில்லை என்ற வரிகள் யாருடையவை?
--ஔவையார்
8.    சாம்போதும் தமிழ்படித்துச் சாதல்வேண்டும்என்றவர் யார்?
--இலங்கைக் கவிஞர் சச்சிதானந்தன்.
9.    தமிழில் தோன்றிய முதல் சிறுகதை எது?
--குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை (வ.வே.சுப்பிரமணியர்)
10. கண்ணதாசன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் எது?
--சேரமான் காதலி.
11. தீ இனிதுஎன்று பாடிய கவிஞர் யார்?
--பாரதியின் வசனகவிதை
12. புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்என்ற கவிஞர் யார்?
--அப்துல் ரகுமான்.
13. முகத்தில் பிறப்பதுண்டோ முட்டாளேஎன்ற கவிஞர் யார்?
--பாரதிதாசன்.
14. ஜெயகாந்தனின் எந்தச் சிறுகதை பின்னர் நாவலாக வளர்ந்தது?
--அக்னிப்பிரவேசம்.
15. பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் படிக்கப்போறேன்  என்றவர் யார்?
--பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
16. தன் மனைவியை இறைவனுக்காக விட்டுக்கொடுத்த நாயனார் யார்?
--இயற்பகை நாயனார்.
17. கடவுளும் கந்தசாமியும் சிறுகதை ஆசிரியர் யார்?
--புதுமைப்பித்தன்
18. கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்ட அண்ணாவின் நாவல் எது?
--குமரிக்கோட்டம்
19. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் யார்?
--கோபாலகிருஷ்ண பாரதி
20. பண்ணாய்வான் பசு எனப் புகழப்படும் இசைத்தமிழறிஞர் யார்?
--குடந்தை ப.சுந்தரேசனார்.
21. வள்ளலாரின் கீர்த்தனைகள் அருட்பா அல்ல, மருட்பா என்றவர் யார்?
--யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை
22. இருபத்துநாலாயிரம் நபிகளில் ஒரு பெண்நபிகூட இல்லையே? ஏன் வாப்பா யார் எழுதிய கவிதை?
--எச்.ஜி.ரசூல்
23. காவிய காலம்என்ற ஆய்வு நூலை எழுதியவர் யார்?
--வையாபுரியார்.
24. புதுக்கவிதை சொற்கள் கொண்டாடும் சுதந்திரதின விழா“ –என்றவர் யார்?
--வைரமுத்து
25.  “இரவில் வாங்கினோம், விடியவே இல்லை“ –என்ற கவிஞர் யார்?
 --சேலம் ம.அரங்கநாதன்

 
 மேலும் சில,
“உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ”என்று கூறியவர் யார்?
                       பட்டினத்தார்
“இன்னாதம்ம இவ்வுலகம் இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே” பாடிய புலவர் யார்?        பக்குடுக்கை நன்கணியார்
(“உண்டாலம்ம இவ்வுலகம்”  கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி)
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” வரிகள் இடம் பெற்ற நூல்கள்
               புறநானூறு, மணிமேகலை
தமிழில் விருத்தப்பாவில் எழுந்த முதல் காப்பியம்?   சீவகசிந்தாமணி
     ( கம்பராமாயணம் இல்லை)
ஐம்பெரும்காப்பியம் எனும் வழக்கை முதலில் கையாண்டவர்? மயிலை நாதர்
“ யான் பெற்ற பெரு பெருக இவ்வையகம்”, “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” எனக் கூறியவர்?
             திருமூலர்
“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்றவர்
             நாமக்கல் கவிஞர் ( பாரதிதாசன் இல்லை)
“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” வரி இடம்பெறும் நூல்?
              மனோன்மணியம்
“காக்கை விடு தூது” நூலாசிரியர் யார்? வெள்ளைவாரணர்

       என்னங்க நீங்க... நாங்க எடுக்குரதுக்கு முன்னாடியே நீங்க எடுத்துட்ரிங்க நீங்க ரொம்ப பாஸ்ட்...
இது வடிவேலு வசனம் தான்.  இப்படிதான் எதையும் கொஞ்சம் பிளான் பண்ணி தான் வினாக்கள் எடுக்கிறார்கள் போலும்.  இருந்தாலும் நாமும் கொஞ்சம் தெரிஞ்சுக்கூனும். 
      இப்பொழுதெல்லாம் இளைய தலைமுறை நிறைய கற்க விரும்புகிறது. போட்டித் தேர்வுகள் மிகவும் கடுமை ஆகின்றன.  தமிழ் நாட்டில் நடக்கின்ற குருப் ஒன்றுக்கான முதன்மைத் தேர்வுகளில் கூட தமிழுக்கு இடம் இல்லை. ஒரு வினா கூட கேட்கப் படுவதில்லை. இதெல்லாம் தமிழுக்கும் தமிழ் கற்கின்ற நம் மாணவர்களுக்கும் இழப்பே.  கவனிக்க வேண்டும் தேர்வாணையம்.  
      சரிங்க ரொம்ப நேரம் ஆய்டுச்சு. அப்பிடியே போறப்ப உங்களுக்கு ஒரு கேள்வி:  ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் நமக்குத் தெரியும். ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் இருக்கா?????????????????????????


திங்கள், 7 ஜூலை, 2014

குறுக்கங்களும் தருக்கங்களும்

        சார்பெழுத்துகளுள் ஐகார, ஒளகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள் உள்ளன. தொல்காப்பியர் நெறிப்படி குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றே சார்பெழுத்துகள்.  ஆனாலும், உரையாசிரியர்கல் ஆங்காங்கே கூறிய செய்திகளின் தொகையாகப் பவணந்தியார் காலத்தில் சார்பெழுத்துகள் எண்ணிக்கை பத்தாயின.  தொல்காப்பிய நூன்மரபு இயலின் ஒழிபே மொழிமரபு என்று சிவஞான முனிவர் கூறுவார். இந்தப் பதிவில் ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள் குறித்துப் பேசுவோம்.

      ஐகாரத்திற்கு அதாவது ஐ எனும் எழுத்திற்கு மாத்திரை இரண்டு.  ஆனால், இதே ஐ எனும் ஒலி மொழியில் இடம்பெறும் போது தன் மாத்திரையில் குறைகிறது.  மொழி முதலில் ஒன்றரை மாத்திரை. மொழி இடை, கடைகளில் ஒரு மாத்திரை. அதே போல ஒள தனியாக ஒலிக்கும் போது இரண்டு மாத்திரை. மொழி முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை. ஒள மொழி இடை கடைகளில் வராது. இந்த இலக்கணத்தைத் தமிழ் கற்ற அனைவரும் அறிவர்.

           “தற்சுட் டளபொழி ஐம்மூ வழியும்
            நையும் ஒளவும் முதலற் றாகும்”  (நன்னூல்)

       இந்த ஐகார, ஓலைகாரக் குறுக்கம் பற்றி வெளிப்படையாகத் தொல்காப்பியத்தில் இல்லை என்றாலும் நான் கல்லூரியில் பயின்ற போது எனது இலக்கண ஆசிரியர் நுண்ணிதின் கூறிய செய்தியைத் தற்போது பகிர்ந்து கொள்கிறேன். தொல்காப்பிய மொழி மரபு இயலில்,

           “ஐஒள   என்னும்  ஆயீ ரெழுத்திற்கு
           இகர   உகரம் இசைநிறை  வாகும்” (தொல்காப்பியம்)

எனும் நூற்பாவை நோக்குங்கள்.  இந்த நூற்பா அளபெடை விளக்கத்திற்குப் பின்வரும் நூற்பா. இதில் இருந்து ஐகாரக்குறுக்கம் பற்றியும் உயிரளபெடை பற்றியும் அறியலாம். முதலில் ‘இசைநிறைவாகும்’  என்றதால் இசைநிறை அளபெடை மட்டுமே கூறியுள்ளது புலனாகிறது. மற்றொன்று ஐகாரம் மொழியில் ( சொல்லில்) வந்தால் இசை நிறைவாக இராது என்பதும் புலனாகிறது. எனவே, ஐகாரம் குறுகுவதை இந்நூற்பா ஒருவாறு சுட்டுகிறது.  உயில அளபெடை வகைப்பாடுகள் பிற்காலத்தே எழுந்தவை. அதை வேறொரு பதிவில் காண்போம். சரி.  இந்த ஐ எவ்வளவு மாத்திரை குறுகுகிறது என்பதில் தெளிவு இல்லை. முன் கூறியவாறு நன்னூலில் மட்டுமே மொழி இடை, கடைகளில் குறுகுகிறது என்பதை அறிகிறோம். நன்னூலுக்கு முந்தைய நூலான யாப்பருங்கலம் ஐகார ஒளகாரத்திற்குச் சொல்லும் விளக்கம்,

   “ ஐகார ஒளகாரக் குறுக்கம் ஆமாறு:  அளபெடுத்தற் கண்ணும் தனியே சொல்லுதற் கண்ணும் என இரண்டிடத்தும் அல்லாத வழி வந்த ஐகார, ஓளகாரம் என்பன தம் அளவில் சுருங்கி ஒன்றரை மாத்திரையாம். ஐகாரம் தனியே நின்று ஒரோவிடத்து ஒருபொருளைச் சொல்லுதற்கண் ஒன்றரை மாத்திரையாம். என்னை?
    “அளபெடை தனிஇரண்டு அல்வழி ஐஒள
     உளதாம் ஒன்றரை தனியும் ஐ ஆகும்”
என்றார் அவிநயனார்”  எனக் கூறுகிறது.

      இந்த உரையில் இரண்டு விசயங்கள் உள்ளன.  ஐகாரம் போலவே ஒள மூவிடங்களில் வரும் என்பதும், ஐ, ஒள தனியே நின்று பொருள் உணர்த்தி வரும் போது ஒன்றரை மாத்திரை என்பதும் ஆகும்.
 
      ஒளகாரம் மொழிக் கடையில் வருவதற்குச் சான்றுகள் ஏற்புடையதாக இல்லை. அவை:  சிறுதலை நெளவி மான்,  நறுமலர் வெளவினர்.    இவை எப்படிச் சொல்லாகும்?  சொற்றொடர் அல்லவா?

      சூ ......அடடடா.....இப்பவே கண்ணக் கட்டுதே.....என்று கூறுகிறீர்களா?  

   அஇ – ஐ ,  அய் – ஐ .  ஆனால் அகர ஒலியுடன் ஆய்தம் சேர்ந்து ஐ ஒலியை உருவாக்குகின்றதாம்!  

    கண்டுபிடி அதனைக் கண்டுபிடி! குட்டையைக் குழப்பிட்டுப் போறவனைக் கண்டுபிடி......சந்திப்போமா!


புதன், 18 ஜூன், 2014

கனவு இலக்கண நூல் அறிவோம்!

     

        கனவு இலக்கண நூல் அறிவோம்!

       விஞ்ஞானிகளின் கனவுகள் உலகத்தை உயர்வடையச் செய்கின்றன. பல விஞ்ஞானிகள் தங்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகளை அவர்களின் கனவுகள் தீர்த்துவைத்துள்ளன.  ஒரு பொருளைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அப்பொருள் பற்றிய கனவு தோன்றுவது இயல்பு. பேரறிஞர்கள் கண்ட மனக் கனவுகள் சமுதாயத்தை உயர்த்துவதற்கு வழிவகுக்கின்றன.
     கனவுகளின் அடித்தளம் விருப்பத்தின் விளைவு என்பது உளவியல் ஆய்வாளரான சிக்மண்ட் பிராய்டு என்பாரின் கருத்து. உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு வகையில் கனவு காண்கின்றனர் தனிப்பட்ட மனிதர்களும் காண்கின்ற கனவுகள் அவர்கள் வாழ்க்கையை ஒட்டி அமைகின்றன. கனவு காணாத மனிதர்களே இல்லை.
     கனவைப் பற்றிய ஆராய்ச்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் மிகுதியாக வளர்ந்தது.  ஆனால் கனவு பற்றிய செய்திகள் இலக்கியங்களில் கண்டிருப்போம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி, பாண்டிமாதேவி கனவுகள், சீவக சிந்தாமணியில் விசையையின் கனவு என்பன நாம் அறிந்தவை.
     கனவுகள் எதிர்பாராது தோன்றுவன. அதனால் தான் எதிர்பாராத இன்பம் பெறும் போதும், நினையாத துன்பம் நேரும் போதும் ‘கனவுபோல நடந்து விட்டது, கனவில் கூட நான் துரோகம் நினைக்க மாட்டேன்” என்பன போன்ற சொல்லாடல்கள் உள்ளன. நனவில் நிகழாதவையும் கனவில் நிகழலாம். நனவு நிலை அறிவு நிலைக்குக் கட்டுப்பட்டது.  கனவு அறிவு நிலை மயங்கி, அதனையும் மீறி நிகழ்வது. இந்தியா எவாறு இருக்க வேண்டும் என்பதை அரசியல் தலைவர்கள் அறிந்ஞர்கள் போன்றோர் கனவு காண்கின்றனர். பயபு அது நனவாகவும் அமைகிறது. பழங்காலப் புலவர்களும் ஒரு நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தம் கவிதையின் வழி தம் கனவினைத் தெரிவிக்கின்றனர். தொல்காப்பியத்திலும் கனவு காண்பது பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன.
     சில நேரங்களில் சில நிகழ்வுகள் நடக்கும் போது அதை முன்பே கண்டது போன்றும், சில நேரங்களில் சில மனிதர்களைச் சந்திக்கும் போதும் அவர்களுடன் முன்பே பழகியது போன்றும் தோன்றுகின்றன. நிச்சயம் இது கனவின் வெளிப்பாடே.
     இப்படி கனவுகள் பற்றி விவரித்துக் கொண்டே போகலாம்.  கனவுக்குக் கூட நம் மொழியில் இலக்கண நூல் இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் இல்லையா?  ஆம் நண்பர்களே.  “பொன்னவன் கனா நூல்” எனும் கனவு இலக்கண நூல் ஒன்றை சமீப காலத்தில் வாசித்தேன். இந்த நூல் திராவிட மொழிகளில் முதலில் தோன்றிய கனவு நூல்.
      கனவு நூல் பற்றிய குறிப்புகள்  சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையில் காணக் கிடக்கின்றன.  ஆனால், 1920 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் இந்தக் கனா நூலை வெளியிட்டுள்ளனர். பொன்னவன் எனும் புலவர் இந்த நூலை யாத்துள்ளார்.  முப்பது பாடல்களைக் கொண்ட இந்த நூல் அந்தாதி யாப்பில் உள்ளது. மேலும் பெண்ணை முன்னிலையாய் ( மகடூஉ) வைத்துப் பாடப்பட்டுள்ளது.
      கனவு காணும் நேரத்தைப்பொறுத்து அதன் நனவு தோன்றுமாம்.
       “படைத்த முற்சாம் ஓராண்டிற் பலிக்கும் பகர்இரண்டே
       கிடைத்தபிற் சாம மிகுதிங்கள் எட்டில் கிடைக்கும் என்னும்
       இடைப்பட்ட சாமம் மூன்றில் திங்கள் ஒரு மூன்று என்பவால்
       கடைப்பட்ட சாமமும் நாள் பத்துளே பலங்கைப் பெறுமே”
என்பது நூலின் தொடக்கத்தில் உள்ள ஒரு பாட்டு.
         இரவு 10- 11மணி   முதல் சாமம், 11-12 இரண்டாம் சாமம், 12-1 மூன்றாம் சாமம், 1-2 நான்காம் சாமம்.
       “ பற்றிடும் கீர்த்தி அணிகள் பெற்றால்,  இன்பம் பால்பருகில்
         அற்றிடும் துன்பம்,  தயிர் பேரில் பொன் பெறும்,  அப்பம் தின்றால்
         உற்றிடும் துன்பம், வரகும் செஞ்சாலியும் உப்பும் எள்ளும்
         பெற்றிடும் இன்பம், இறைச்சி உண்டாலும் பெருநலமே”
எனும் பாடல் நற்பலன்களைச் சொல்கின்றது.
      “ அல்லல் உண்டாகும் இரந்திடில், கட்டிலில் அப்பம் தின்றால்
        செல்வம் உண்டாகும், செழுமனிப் பூணைச் சில பறித்துப்
        புல்லர் கொண்டு ஓடினும் செல்வம் போம், சுரை, பூசணிக்காய்
        கொல்லைஅம் சாரல் வரையினில் காய் பேரில் குற்றம் உண்டே”
எனும் பாடலில் தீய பலன்களும் சொல்லப்படுகின்றன

        தமிழ் ஒரு பெருங்கடல். யாவும் அடங்குகின்றன. உலகில் கனவு பற்றிய ஆராய்ச்சி தொடங்கும் முன்பே இங்கு அதற்கு ஓர் இலக்கண நூல் இருந்துள்ளமை அறியும் போது என்னே வியப்பு. இப்படி எல்லாத் துறைக்குமான பழந்தமிழ் நூல்கள் வெளிப்பட வேண்டும்.  அரிய வகை நூல்கள் வெளிக்கொணர வேண்டும் என்ற கூற்றே தீர்க்க தரிசி பாரதியின் கனவு.  கனவு மெய்ப்படும்.  காத்திருப்போம்.  

வியாழன், 22 மே, 2014

சௌராஷ்டிர திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலாசிரியர் திரு.சங்குராம்




                                       நண்பர்களே கடந்த பதிவில் திருக்குறளின் சௌராஷ்டிர மொழிபெயர்ப்பு நூல் பற்றி அறிந்தோம். அந்த நூலை அழகுற யாத்த கவிஞர் சங்குராம் அவர்களின் வரலாறு இந்தப் பதிவில் பகிரப்படுகிறது.  கவிஞர்- ஸங்கு.ராம் மதுரை மீனாக்ஷிபுரத்தில் ஸௌராஷ்ட்ர குலத்தில்மார்கண்டேய கோத்ரத்தில்  பிரம்மஸ்ரீ . ஸங்கு. சுப்புராமய்யர் - நாகம்மாள்  தம்பதிகளின் தவப்புதல்வராக 06/04/1907 ல் ஸங்கு.ராம் தோன்றினார்.
இளம்பருவம் முதற்கொண்டு பண்புநலம் விளங்க கல்வி-கேள்விகளில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். தன்னியல்பாகத் தமிழிலும் ஸௌராஷ்ட்ர மொழியிலும் பாடல்கள் புனையும் பாங்கும் கைவரபெற்றவர்.
மதுரை ஸௌராஷ்ட்ர ஸுகுணோதய நாடக சபையோடு தொடர்பு கொண்டார். அதன் ஆசிரியர் ஸ்ரீ வை..வெங்கடேஷ்வர பாகவதர் அவர்களையும் வஸ்துகவி விப்ரபந்து குடுவா.வெ. பத்மநாப ஐயர் அவர்களையும் குருவாக ஏற்றார். கவிபாடும் திறனை வளர்த்துக்கொண்டார். பல ஸௌராஷ்ட்ர நாடகங்களில் கதை,வசனம்,பாடலாசிரியர் ஆனார்.
தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆர்வம் கொண்டு மதுரை தமிழ்ச்சங்கம் திரு. அப்பணய்யங்கார் அவர்களை குருவாக பெற்று தமிழ் கற்றார்.
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் அவ்வப்போது தொண்டர்களுக்கு ஸௌராஷ்ட்ரா மொழியிலும், தமிழ்மொழியிலும் தேசியப் பாடல்களை இயற்றிக்கொடுத்து பாடச் செய்தார்.
திருமண நலுங்கு பாடல்களை இயற்றிக்கொடுத்தார். நல்ல தமிழிலும் நயமான ஸௌராஷ்ட்ரா மொழியிலும் வரவேற்பிதழ்கள்வாழ்த்து மடல்கள் வரைந்து பலருக்கு வழங்கி உதவினார்.
தம் இல்லத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் தல வரலாறும்  ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ சதகம் என்னும் தமிழ் செய்யுள் நூலும் இயற்றி 1973 ல் கோயிலுக்கு வழங்கினார்.
மேலும் ஞானாமிர்த கீதம், ஸித்தாச்ரம பிரபாவம் முதலான பல நூல்களும் எழுதியுள்ளார். ஸௌராஷ்ட்ர நீதி ஸம்பு என்னும் அரிய ஸௌராஷ்ட்ர நூலுக்கு தமிழ் மணம் கமழும் அரிய விளக்கவுரை எழுதி வைத்துள்ளார்.
அவருடைய படைப்புகளில் தலையாயது உலகப்பொதுமறை எனப்பெறும் திருக்குறளின் ஸௌராஷ்ட்ர மொழியாக்கத் திருக்குறளாகும்தமிழ் வெண்பா இலக்கணப்படி ஸௌராஷ்ட்ர மொழியில் குறள்வெண்பாக்களாகவே படைக்கப்பெற்ற அருமையும் பெருமையும் உடையது ஸௌராஷ்ட்ர திருக்குறள்.   இஃது உருவான வரலாறு அருள்மயமானது.
ஸ்ரீ.சங்கு.ராம் அவர்கள்  ஸித்தாச்ரமத்துடன் பல்லாண்டு காலம் தொடர்புடையவராய் இருந்தார். ஸித்தாச்ரமத்தில் இவர் ஸமஸ்க்ருதம் பயின்ற மாணவர்,
 ஸித்தாச்ரம பாலர் வகுப்பில்ஸௌராஷ்ட்ர நீதி ஸம்பு  நூல் பயிற்றுவித்த ஆசிரியர், ஸித்தாச்ரம பூஜ்ய ஸ்ரீ குருஜி இளம்வயதில் பாரத ஹிமாலய யாத்திரை சென்றுவந்த பிறகு வைகை நதி தீரத்தில் நீண்டகாலம் குருஜியின் அருளுரை அமுதம் உண்டவர்ஆசி பெற்றவர் ஸ்ரீ.சங்கு.ராம் அவர்கள்.
ஒரு சமயம்  ஸ்ரீ.சங்கு.ராம் அவர் ஸௌராஷ்ட்ர மொழியில் தாம் எழுதிய ஒரு வாழ்த்து இதழை ஆஸ்ரம குருஜியிடம் காட்டி ஆசிபெறச் சென்றார். அந்த  வாழ்த்து இதழில் இரண்டு திருக்குறள் பாக்களை அவ்வமைப்பிலேயே மொழி பெயர்த்துச் சேந்த்திருந்தார்.
பூஜ்ய குருஜி  அவைகளைக்கண்டு மகிழ்ந்தார். அவற்றின் அமைப்பு அருமையும் பொருட்செறிவுப் பெருமையும் நினைந்து நினைந்து வியந்தார். பின் அவரை நோக்கி திருக்குறள் முழுவதையும் நீங்கள் ஸௌராஷ்ட்ரா மொழியில் படைக்கவேண்டும் அது உங்களால் முடியும் என்று அருளாசிவழங்கினார் ஊக்கமூட்டினார் மீண்டும் மீண்டும் தூண்டி உற்ச்சாகப்படுத்தினார் அந்த அருளாசி பெருவிளைவாக ஸௌராஷ்ட்ர திருக்குறள் சிறப்பாக முழுமையாக உருப்பெற்றுள்ளது.
சங்கு.ராம் தம் காலத்தில் இதனை அச்சிட்டு வெளியிட பல்வேறு முயன்றும் இயலாத்தாயிற்று. பின்னர் பூஜ்ய ஸ்ரீ  குருஜியை அணுகி குருவருளால்  உருவான இன்நூலை (சௌராஷ்ட்ர திருக்குறள்)  குரு தேவரே தம் சொந்த பணத்தால் நூல் வடிவில் நல்ல முறையில் அச்சிட்டு வெளியிட்டு உலகம் போற்றச் செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டார்.
69 ஆண்டுகள் ( 1907 – 1976 ) வாழ்வாங்கு வாழ்ந்த ஸ்ரீ.சங்கு.ராம் அவர்கள் 26-4-1976 ல் பூதவுடல் நீத்து புகழுடல் பெற்றார்.  அதன்பின் அவர் விருப்பப்படி  ஸௌராஷ்ட்ர திருக்குறள் கையெழுத்துப் பிரதிகளை  கவிஞர் ஸ்ரீ.சங்கு.ராம் அவர்களின் வாரிசு களான துணைவியார் திருமதி.நாகலம்மாள் அவர்களும் இரு மகள்களும்  சகல உரிமைகளுடன் ஸித்தாச்ரம பூஜ்யஸ்ரீ குருஜிக்கே வழங்கிவிட்டனர்.
திருவள்ளுவர் நெசவுத்தொழில் செய்தார் என்பர். அவரால் தமிழகம் வான்புகழ் பெற்றது.
சங்கு.ராம் ஸௌராஷ்ட்ர  திருக்குறளால் உலகளாவி பரந்து  வாழும் உலக ஸௌராஷ்ட்ர சமுதாயம் உயர்தனி இடம் பெற்றுத்திகழும்.  இதனால் தமிழும் ஸௌராஷ்ட்ர மொழியும் சகோதர பாஷையாக யாண்டும் விளங்கும்.

அடக்கமும் அமைதியும் தவழும் முகம்;
உயர்ந்தோரைக் கவரும் கண்கள்;
எளிய வெள்ளாடை,
வேகமோ-மந்தமோ இல்லாத நடை
இங்கிதம் கொண்ட இனிய சொற்கள்
பணிவு சான்ற  பண்புள்ள பேச்சு
இவ்வளவும் சேர்ந்த ஓட்டுமொத்தமான உருவம்தான் ஸௌராஷ்ட்ர திருக்குறள் ஆசிரியர் அமரர்  கவிஞர் S.S.ராம் என்னும்சங்கு ராம் அவர்கள்.                              
      ( நன்றி : தம்பி கொ.சுப. செந்தில்குமாரின்     www.sourashtralibrary.blogspot.com                                          வலைப்பூவில் இருந்து இந்தத் தேறல் எடுத்துக் கொண்டமைக்கு..) 
>