நண்பர்களே கடந்த பதிவில் திருக்குறளின் சௌராஷ்டிர மொழிபெயர்ப்பு நூல் பற்றி அறிந்தோம். அந்த நூலை அழகுற யாத்த கவிஞர் சங்குராம் அவர்களின் வரலாறு இந்தப் பதிவில் பகிரப்படுகிறது. கவிஞர்- ஸங்கு.ராம் மதுரை
மீனாக்ஷிபுரத்தில் ஸௌராஷ்ட்ர குலத்தில்
- மார்கண்டேய கோத்ரத்தில் பிரம்மஸ்ரீ . ஸங்கு. சுப்புராமய்யர் - நாகம்மாள் தம்பதிகளின் தவப்புதல்வராக
06/04/1907 ல் ஸங்கு.ராம் தோன்றினார்.
இளம்பருவம்
முதற்கொண்டு பண்புநலம் விளங்க கல்வி-கேள்விகளில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். தன்னியல்பாகத்
தமிழிலும் ஸௌராஷ்ட்ர மொழியிலும் பாடல்கள் புனையும் பாங்கும் கைவரபெற்றவர்.
மதுரை
ஸௌராஷ்ட்ர ஸுகுணோதய நாடக சபையோடு தொடர்பு கொண்டார். அதன் ஆசிரியர் ஸ்ரீ வை.அ.வெங்கடேஷ்வர பாகவதர் அவர்களையும் வஸ்துகவி விப்ரபந்து
குடுவா.வெ. பத்மநாப ஐயர் அவர்களையும் குருவாக
ஏற்றார். கவிபாடும் திறனை வளர்த்துக்கொண்டார். பல ஸௌராஷ்ட்ர நாடகங்களில் கதை,வசனம்,பாடலாசிரியர் ஆனார்.
தமிழ்
இலக்கிய இலக்கணங்களில் ஆர்வம் கொண்டு மதுரை தமிழ்ச்சங்கம் திரு. அப்பணய்யங்கார் அவர்களை
குருவாக பெற்று தமிழ் கற்றார்.
இந்திய
விடுதலைப் போராட்ட காலத்தில் அவ்வப்போது தொண்டர்களுக்கு ஸௌராஷ்ட்ரா மொழியிலும், தமிழ்மொழியிலும் தேசியப்
பாடல்களை இயற்றிக்கொடுத்து பாடச் செய்தார்.
திருமண
நலுங்கு பாடல்களை இயற்றிக்கொடுத்தார்.
நல்ல தமிழிலும் நயமான ஸௌராஷ்ட்ரா மொழியிலும் வரவேற்பிதழ்கள்
– வாழ்த்து மடல்கள் வரைந்து பலருக்கு வழங்கி உதவினார்.

மேலும்
ஞானாமிர்த கீதம், ஸித்தாச்ரம பிரபாவம் முதலான பல நூல்களும் எழுதியுள்ளார். ஸௌராஷ்ட்ர நீதி ஸம்பு என்னும் அரிய ஸௌராஷ்ட்ர நூலுக்கு தமிழ் மணம் கமழும் அரிய
விளக்கவுரை எழுதி வைத்துள்ளார்.
அவருடைய
படைப்புகளில் தலையாயது உலகப்பொதுமறை எனப்பெறும் திருக்குறளின் ஸௌராஷ்ட்ர மொழியாக்கத்
திருக்குறளாகும் – தமிழ் வெண்பா இலக்கணப்படி ஸௌராஷ்ட்ர மொழியில் குறள்வெண்பாக்களாகவே படைக்கப்பெற்ற
அருமையும் பெருமையும் உடையது ஸௌராஷ்ட்ர திருக்குறள். இஃது உருவான வரலாறு அருள்மயமானது.
ஸ்ரீ.சங்கு.ராம் அவர்கள் ஸித்தாச்ரமத்துடன் பல்லாண்டு காலம் தொடர்புடையவராய் இருந்தார். ஸித்தாச்ரமத்தில் இவர் ஸமஸ்க்ருதம் பயின்ற மாணவர்,
ஸித்தாச்ரம பாலர் வகுப்பில்
‘ ஸௌராஷ்ட்ர நீதி ஸம்பு ’
நூல் பயிற்றுவித்த ஆசிரியர், ஸித்தாச்ரம
பூஜ்ய ஸ்ரீ குருஜி இளம்வயதில் பாரத ஹிமாலய யாத்திரை சென்றுவந்த பிறகு வைகை நதி தீரத்தில்
நீண்டகாலம் குருஜியின் அருளுரை அமுதம் உண்டவர் – ஆசி பெற்றவர்
ஸ்ரீ.சங்கு.ராம் அவர்கள்.
ஒரு சமயம்
ஸ்ரீ.சங்கு.ராம் அவர்
ஸௌராஷ்ட்ர மொழியில் தாம் எழுதிய ஒரு வாழ்த்து இதழை ஆஸ்ரம குருஜியிடம் காட்டி ஆசிபெறச்
சென்றார். அந்த
வாழ்த்து இதழில் இரண்டு திருக்குறள் பாக்களை அவ்வமைப்பிலேயே மொழி
பெயர்த்துச் சேந்த்திருந்தார்.
பூஜ்ய
குருஜி அவைகளைக்கண்டு மகிழ்ந்தார்.
அவற்றின் அமைப்பு அருமையும் பொருட்செறிவுப் பெருமையும் நினைந்து நினைந்து
வியந்தார். பின் அவரை நோக்கி திருக்குறள் முழுவதையும் நீங்கள்
ஸௌராஷ்ட்ரா மொழியில் படைக்கவேண்டும் அது உங்களால் முடியும் என்று அருளாசிவழங்கினார்
ஊக்கமூட்டினார் மீண்டும் மீண்டும் தூண்டி உற்ச்சாகப்படுத்தினார் அந்த அருளாசி பெருவிளைவாக
ஸௌராஷ்ட்ர திருக்குறள் சிறப்பாக முழுமையாக உருப்பெற்றுள்ளது.
சங்கு.ராம் தம் காலத்தில் இதனை
அச்சிட்டு வெளியிட பல்வேறு முயன்றும் இயலாத்தாயிற்று. பின்னர்
பூஜ்ய ஸ்ரீ குருஜியை
அணுகி குருவருளால் உருவான
இன்நூலை (சௌராஷ்ட்ர திருக்குறள்) குரு தேவரே தம் சொந்த பணத்தால் நூல்
வடிவில் நல்ல முறையில் அச்சிட்டு வெளியிட்டு உலகம் போற்றச் செய்ய வேண்டுமென வேண்டிக்
கொண்டார்.
69 ஆண்டுகள் ( 1907 – 1976 ) வாழ்வாங்கு வாழ்ந்த ஸ்ரீ.சங்கு.ராம் அவர்கள் 26-4-1976 ல்
பூதவுடல் நீத்து புகழுடல் பெற்றார்.
அதன்பின் அவர் விருப்பப்படி ஸௌராஷ்ட்ர திருக்குறள் கையெழுத்துப்
பிரதிகளை கவிஞர் ஸ்ரீ.சங்கு.ராம் அவர்களின் வாரிசு களான துணைவியார் திருமதி.நாகலம்மாள் அவர்களும் இரு மகள்களும் சகல உரிமைகளுடன் ஸித்தாச்ரம பூஜ்யஸ்ரீ குருஜிக்கே
வழங்கிவிட்டனர்.
திருவள்ளுவர்
நெசவுத்தொழில் செய்தார் என்பர்.
அவரால் தமிழகம் வான்புகழ் பெற்றது.
சங்கு.ராம் ஸௌராஷ்ட்ர திருக்குறளால் உலகளாவி பரந்து வாழும் உலக ஸௌராஷ்ட்ர சமுதாயம் உயர்தனி
இடம் பெற்றுத்திகழும். இதனால் தமிழும் ஸௌராஷ்ட்ர மொழியும் சகோதர பாஷையாக யாண்டும் விளங்கும்.
அடக்கமும்
அமைதியும் தவழும் முகம்;
உயர்ந்தோரைக்
கவரும் கண்கள்;
எளிய வெள்ளாடை,
வேகமோ-மந்தமோ இல்லாத நடை
இங்கிதம்
கொண்ட இனிய சொற்கள்
பணிவு
சான்ற பண்புள்ள பேச்சு
இவ்வளவும்
சேர்ந்த ஓட்டுமொத்தமான உருவம்தான் ஸௌராஷ்ட்ர திருக்குறள் ஆசிரியர் அமரர்
கவிஞர் S.S.ராம் என்னும் ‘சங்கு ராம் அவர்கள்.
( நன்றி : தம்பி கொ.சுப. செந்தில்குமாரின் www.sourashtralibrary.blogspot.com வலைப்பூவில் இருந்து இந்தத் தேறல் எடுத்துக் கொண்டமைக்கு..)