வியாழன், 10 ஏப்ரல், 2014

விருந்தோ... அமரர் மருந்தோ...

         விருந்தோ... அமரர் மருந்தோ...

ஆன்றோர் உண்ணும் அமுதம் தானோ!
என்னவள் இல்லம் இமயம் தானோ!
அத்தையும் மாமனும் அருகில் தோன்றி
மெத்த அருளும் இறைவரும் தாமோ!

மூன்று ஆண்டாய்  முடித்த காதலைத்
தோன்றச் செய்து துணிந்த மனத்துடன்
ஈன்ற மகளை எனக்கென அருளிய
நான்காண் தெய்வம் நான்புகழ் தெய்வம்!

விருந்தென என்னை வீட்டிற்கு அழைத்து
அரும்பிய புன்னகை அள்ளித் தெளித்து
அருந்தமிழ் போலே ஆன்ற உணவை
விருந்தெனப் படைத்தனர் வியக்குது நெஞ்சம்!

காலை நேரம் காரட் அல்வா
பாலை அடக்கிய பாலின் அல்வா
மண்மணம் வீசும் மல்லிச் சட்டினி
தென்னங் காயின் தீஞ்சுவைச் சட்டினி


நாசி துளைக்கும் நறுமணச் சுவையுடன்
பாசிப் பருப்பில் பதார்த்த சாம்பார்
பூரி கொண்டு புசிக்கும் போது
பாரி கூடப் பசித்துப் போவான்!

சுக்கு போட்டுச் சுட்ட பாலின்
பக்குவம் தன்னைப் பகரும் போது
கரத்த தொண்டை கனிவாய்த் தோன்றி
உரத்த குரலில் ஊர்க்கே சொல்லும்!

ஆவின் தயிரில் உள்ளிப் பச்சடி
நாவின் அடியில் எச்சிலை எழுப்பும்
முந்திரி போட்டு முடித்த சாதம்
இந்திர லோகம் எங்கும் வீசும்!


அத்தை செய்த அமுதுக்கு நிகரா
சொத்தை ஆன மாலை உணவு!
என்னவள் அருகில் இனிதாய் இருக்க
இன்சுவை தானே இந்த உணவும்!


புளியின் சாதம் புன்னகை தோற்றும்
களிக்கச் செய்து கனிவுறும் மனத்தை
மல்லிகைப் பூப்போல் இட்டலி கூட
மெல்ல இறங்கும் தக்காளி குழம்பால்!

என்ன சொல்லி என்ன மிஞ்சும்
என்னவள் வீட்டில் அன்பா பஞ்சம்!
என்னவள் வீட்டைப் பிரியும் போது
என்றன் கண்ணில் கண்ணீர் மிஞ்சும்!





1 கருத்து:

>