ஞாயிறு, 4 ஜூன், 2017

பாடநூல், கையேடுகளின் முன்னோடி




பாடநூல், கையேடுகளின் முன்னோடி


                                  ஈழத்து இலக்கணக்கொடையில்  ஆறுமுகநாவலரின் பங்களிப்பு முதன்மையானது.  இலக்கண உரையாசிரியர், உரைநடை வடிவ இலக்கணம், வினாவிடை வடிவ இலக்கண நூலின் ஆசிரியர், பல அரிய  நூல்களின் பதிப்பாசிரியர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர் ஆறுமுகநாவலர். “இலக்கணச்சுருக்கம்” என்னும் இவரது படைப்பு எழுத்து, சொல் இரண்டிற்கும் இலக்கணம் கூறுகிறது.  இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என்ற முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.  முதலிரு பிரிவுகளில் மரபிலக்கண நூல்களில் கூறப்படுகின்ற செய்திகள் உள்ளன.  மூன்றாவது பிரிவு தொடர்மொழியதிகாரம் தற்காலத் தொடரியல் சிந்தனைக்கு வழிவகுக்கிறது.

                                 பவணந்தியடிகளின் நன்னூலுக்கு மரபு அடிப்படையிலான காண்டிகையுரை படைத்த ஆறுமுகநாவலர் இலக்கணச்சுருக்கம், இலக்கண வினாவிடை ஆகிய நூல்களைச்  சுருங்கிய வடிவத்தில் கொணர்ந்தமைக்குக் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றமே காரணம்.  ஆங்கிலேயர் ஆட்சிமுறையால் கல்விப் பரவலாக்கம் உண்டானது.  தேர்வு முறை கொண்டுவரப்பட்டது. மேலும், ஆங்கிலேயர் தமிழ் மொழியறிவை எளிதில் பெறும் வகையில் எளிய நடை இலக்கண நூலை எழுதுவோரை ஊக்குவித்தனர்.  இக்கருத்து மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் “கிறித்துவமும் தமிழும்” என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.  இதனால், ஆறுமுகநாவலர் உரைநடை வசன முறையில் “ இலக்கணச்சுருக்கம்” என்ற நூலைப் படைத்தார்.  இந்நூலில் 406 வசனங்கள் இலக்கண விதிகளை எளிமையான நடையில் உணர்த்துகின்றன. மேலும் மாணவர்கள் தங்களை மதிப்பீடு செய்து கொள்ளப் “பரீட்சை வினாக்கள்” என்னும் பகுதி இடம்பெறுகிறது. இவ்வமைப்பு தற்போதைய பாடநூல் அமைப்பைக் கொண்டுள்ளது.

                                       நாவலரின் “இலக்கண வினாவிடை” என்னும் நூல் எழுத்து, சொல் இரண்டிற்குமான இலக்கண நூல். இது கேள்வி பதில் என்னும் போக்கில் அமைகிறது.  இலக்கணப் படைப்புலகில் கையேடு வடிவத்தில் எழுந்த முதல் நூல் இதுவே எனலாம். இந்நூல் 175 வினா விடைகளைக் கொண்டது.


                இலக்கணச் சுருக்கம் பாட நூல் (TEXT BOOK) வடிவத்திலும் இலக்கண வினாவிடை கையேடு (GUIDE) வடிவத்திலும் அமையுமாறு செய்து பாடநூல், கையேடு வடிவங்களுக்கு முன்னோடியாகத் திகழ்பவர் ஆறுமுகநாவலர்.  


2 கருத்துகள்:

>