யாழ்ப்பாண மின் நூலகத்தில் கனகி
புராணம் எனும் நூலைக் கண்டேன். என்னடா ஒருவேளை நம் சிலப்பதிகாரப் புரட்சி நாயகி
கண்ணகியைப் பற்றிய நூலாக இருக்குமோ என உடனே தரவிறக்கம் செய்தேன். பின்பு அந்த நூலைப் படிக்க நேர்ந்தேன். முழுக்க
முழுக்க சிருங்காரச் சுவை கொண்டதாக அந்த நூல் விளங்கியது. அதனைப் பற்றியே இந்தப்
பகிர்வு.
கனகி
என்பவள் இலங்கையில் உள்ள கவின்மிகு வண்ணார்பண்ணை எனும் சிற்றூரில் பிறந்தவள். இவள் ஒரு கணிகை மாது. இந்தப் பொது மகளோடு பல
தரப்பினரும் தொடர்புடன் இருந்தனர். நூல் செய்த புலவர் நட்டுவச் சுப்பையனார்
உளப்பட. இந்தப் பரத்தைப் பெண்ணுடன்
தொடர்பு கொண்டவர்க்கு மேக வேட்டை எனும் நோய் தாக்குகிறது. நோயின் கொடுமை தாங்க
முடியாமல் தாம் பட்ட பெரும்பாட்டை மற்றையோர் தவிர்த்தல் வேண்டி உலகுக்கு
நல்லரிவுருத்தும் வேட்கை உந்த இந்த நூலை இயற்றினார் புலவர் நட்டுவச்
சுப்பையனார். நூலில் இன்னிசை, சொற்சுவை,
நகைச்சுவை, அழுகைச் சுவை உவப்பான உவமைகள் போன்ற இலக்கியப் பண்புகள் உள்ளன. நானூறு
விருத்தப் பாக்களால் ஆன நூல் எனும் குறிப்பு இருந்தாலும் சொற்ப பாடல்களே இன்று
கிடைக்கின்றன. இந்த நூலை 1937 ஆம் ஆண்டு திரு. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள்
தமக்குத் தெரிந்த கவிகளைக் கொண்டு பதிப்பித்தார்.
இதற்கு
அடுத்து இந்த நூல் பற்றி இலங்கை வானொலியில் பரவலாகப் பேசப்பட்டுள்ளன. மேலும் புதிய
பதிப்பு தேவை என்ற அவசியம் ஏற்பட சில காரணங்கள் கூறப்பட்டன. முதல் பதிப்பிலுள்ள சுயம்வரம் படலத்தில் இல்லாத
ஒன்பது செய்யுள்கள் புதிதாகக் கிடைத்திருப்பது; மற்றது முதல் பதிப்பிலுள்ள
நாட்டுப் பாடலைச் செய்யுட்கள் பதினாறும் சுப்பையனார் இயற்றியது அன்று என்பது
தெளிவாகத் தெரிந்தமை. காரணம் இலங்கை வானொலியில் 1946 ஆம் ஆண்டில் ஒருசமயம் இந்த நூலில் உள்ள “ புல்லை மேய்ந்து தங்கு
நின்று” எனும் பாடல் பற்றி பேசப்பட்டது. அந்த நிகழ்வைக் கேட்ட சித்சபேசன் எனும்
ஒருவர் வானொலிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் “ தாங்கள் கனகி புராணம் பற்றி
பேசிய போது சொன்ன புல்லை மேய்ந்து எனும் பாடல் என்னுடையதே. பழைய ஏட்டுச் சுவடியில்
நான் சில கவிகளை எழுதி இணைத்தேன். முதல்
பதிப்பில் அது வந்துவிட்டது. நான் எழுதிய கவிகள் இப்படியாவது இடம் பெறட்டுமே என
எண்ணி இந்தத் தவற்றைச் செய்தேன். என்னை மன்னியுங்கள். உங்களையும் நம் தேசத்தையும்
ஏமாற்றிய குற்றத்திற்கு ஆளாகிவிட்டேன்.” என உருக்கமாக எழுதியிருந்தார். அதனால்
இந்தக் கனகி புராணம் திருந்திய பதிப்பாக வெளி வந்தது. 1961ஆம் ஆண்டில் இதன் திருந்திய பதிப்பை வட்டுக்கோட்டை மு.
இராமலிங்கம் என்பார் வெளியிட்டார். இந்தப்
பதிப்பில் பிள்ளையார் காப்பு, நாட்டுப் படலம், சுயம்வரப் படலம், வெட்டைகாண் படலம்
என்ற பிரிவுகளில் மொத்தம் இருபத்தைந்து விருத்தங்கள் உள்ளன.
நாட்டுப் படலத்தில்
இரண்டு விருத்தங்கள் உள்ளன. முதல் பாடல் கனகியின் தோற்றச் சிறப்பைக் கூறுகிறது.
இரண்டாம் பாடல் இந்த வண்ணார் பண்ணைச் சிவன் கோவில் நடன மாது கனகியிடம் இலங்கையில் அரசாண்ட மாராச கேசரி முதல் மடாதிபதிகள் வரை
அனைவரும் பொது உறவு வைத்திருந்தமை வெளிப்படுகிறது.
சுயம்வரப் படலத்தில்
பத்தொன்பது விருத்தங்கள் உள்ளன. பாடல்கள்
யாவும் தோழி கூற்றாக உள்ளன. கனகியிடம் உறவு கொள்ள வந்திருக்கும் ஒவ்வொரு
நபர்களையும் தோழி அறிமுகம் செய்யும் தொனியில் பாடல்கள் நகைச்சுவை, சிருங்காரச்
சுவை தோன்ற அமைந்துள்ளன. நாட்டுக் கோட்டைச் செட்டி நல்லாண்டப்பன், மல்லாக வீரர்
நவாலியூரன், சின்னையன், களஞ்சியக் குருக்கள், சிவப்பிரகாசன், நீயூற்றன், ஊராத்துறை அருணாச்சல உடையார்,
வட்டுக்கோட்டை சுப்பு, கோப்பாய் முத்துக்குமார், கறுவற்றம்பி, நன்னி, செல்வநாயகம்,
ஆனைக்கோட்டை ஆறுமுகம், பெரியதம்பி வைத்தியன், மாலை கட்டும் தொழில் செய்யும்
பண்டாரம், நொண்டிக்கையன், பெரிய பணக்காரன் திருமலைச் சின்னையன் ஆகியோர் கனகிக்காக
வரிசையில் நிற்கின்ற நிலையைப் பாடல் எடுத்தியம்பும் விதம் அழகாக உள்ளது.
வெட்டை காண்
படலத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. இறுதி பாடல் வெண்பா யாப்பில் உள்ளது.
“மேகங்கள் யாவுமுயர்
விண்நீங்கி வேசையர்தம்
தேகங்களில் வாசம் செய்கையான் -
மாகமிசை
ஆசைக்கும் கார்காணோம்
அவ்வேசையார் கொடுப்பார்
காசைக்
கொடுப்பார்க்குக் காண்”
இந்த வெண்பாவை திரு. கா. சு.
பிள்ளை அவர்கள் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டிலே வேதநாயகம் பிள்ளை பாடல்களில்
ஒன்றாய் வந்துள்ளது எனும் ஒரு குறிப்பும் காணப்படுகிறது. எனவே இந்த நூலில் இடைச்
செருகல்கள் நிறைய உள்ளன என்பது ஒருவாறு புலனாகிறது
இதோ சில பாடல்கள்:
“ தாமரை
முகையும் கோங்கின தரும்பும் தந்தியின் கொம்புடன் சிமிழும்
காமரு சூதின் கருவியும் குடமும் காமனார்
மகுடமும் கடிந்தே
சேமமாய் வென்று கூவிளம் பழத்தைச் சேர்ந்திடும்
தனமுடைக் கனகே
நாமம் இங்கிவர்க்குக் களஞ்சியக் குருக்கள் நங்கை
நீ காணுதி என்றாள்”
(சுயம்வரப் படலம்
)
வெட்டை என்னும் வியாதி தலைப்பட்டுத்
தட்டுக் கெட்டுத் தனித்தனி ஆடவர்
பொட்டுக் கட்டிய பூவையினால் என்று
முட்டுப் பட்டனர் மூத்திரம் பெய்யவே” ( வெட்டைகாண் படலம்)