செவ்வாய், 8 ஜூலை, 2014

கேள்விக் கனல்கள்

கேள்விக் கனல் 
              காலம் இப்போதெல்லாம் மிக விரைவாக முன்னேறுகிறது.  நேற்று நான் ஓர் இடுகை இட்டு முடிந்த பின் தான் எவ்வளவு நிகழ்வுகள்.  இது போட்டி யுகம். விரைந்து செயல்பட வேண்டும். நான் ரொம்ப சொங்கி. இதற்குப் பல  காரணங்கள் அடுக்குவது கூட எனது சோம்பேறித்தனத்தையே வெளிப்படுத்துகின்றன.  இடுகைக்கான பின்னோட்டத்திற்குப் பதில் தரக் கூட எனக்குக் கூடுவதில்லை.  இதோ இப்போது அவசர அவசரமாகத் தேர்வு அறையில் தேர்வெழுதும் மாணவனாக நான் தடுமாறித் தடுமாறித் தட்டச்சு செய்கிறேன்.  அவசரத்துல அண்டாவிலும் கை நுழையாது... சரிதான்.

        நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது என் தமிழாசிரியர் சொன்ன கருத்து: “ஜெயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியை அரங்கேற்றம் செய்த போது ஒவ்வொரு பாட்டிலும் லயித்துப் போன அரசன் ஒவ்வொரு பொன் தேங்காய் பரிசாகத் தந்தான்”. இப்போது எதற்கு இந்த கருத்து என்று நீங்கள் கேட்கலாம்.  தற்போதெல்லாம் போட்டித் தேர்வில் கேட்கப்படுகின்ற வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் இப்படிப் பொன் தேங்காய் வாரி வழங்கப் படுகின்றதோ எனும் ஐயம் எழுகின்றது. கடந்த மாதம் நடைபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர்க்கான முதனிலைத் தேர்வை நானும் எழுதினேன். வினாக்கள் ஒவ்வொன்றும் தெரிந்தது தான். ஆனால் பதில் தெரிவதில் தான் தடுமாற்றம்,  “அட எங்க இருந்து தான் இப்படி கேள்வி எடுப்பாங்களோ தெரியலை” என்ற குரலைப் பரவலாகத் தேர்வு மையத்தில் கேட்க முடிந்தது.

         இன்று காலையில் எனது செல்பேசி மூலமாக வளரும் கவிதை வலைப் பக்கத்தை உலாவி வரும் போது, நேற்றைய இடுகையில் ஐயா அவர்கள் பல வினாக்களை எழுப்பியுள்ளார்.  வினாக்கள்... தெரியும்....ஆனால் தெரியாது என்று நக்கல் அடிப்பது போல இருக்கின்றன.  ஒரு வேளை முத்துநிலவன் ஐயா தான் இது போன்ற வினாக்களின் ஊற்றோ எனும் எண்ணம் எழுந்தது. நமது தமிழ் மொழியில் நாம் அறிந்து கொள்ளவேண்டிய அவசியமான வினாக்கள் சார்ந்த பதிவு மிக அருமை.  இந்த வினாக்கள் புதுக்கோட்டையில் நான் பணிபுரிந்த போது ஐயா அவர்களின் தமிழாசிரியர்கள் கருத்தாய்வுக்  கூட்டத்தில்  கலந்து கொண்ட போதே அறிந்து கொண்டேன். முத்துநிலவன் ஐயா அவர்கள் வினாக்களுக்கான விடைத் தேடலை ஜோசப் விஜு ஐயா மற்றும் எனது வலைப் பக்கத்தில் பார்க்குமாறு செய்து விடை பெற்றுள்ளார்.  ஆனால் ஜோசப் ஐயா வேகத்தில் சூரிய ஒளியை மிஞ்சிவிட்டார். இதோ இப்போது தான் எனது வலைப்பக்கத்தில் தட்டெழுத்துத் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

1.    குமரியில் உள்ள வள்ளுவர் சிலையின் உயரம் என்ன?
            --133அடி
2.    சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் எது?
---நன்னூல்.
3.    அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்வரி இடம்பெற்ற நூல் எது?
--கம்பராமாயணம்.
4.    பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல் எது?
--பரிபாடல்.
5.    தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் பழந்தமிழ் நூல் எது?
--புறநானூறு.
6.    ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்று கூறியவர் யார்?
---திருமூலர்
7.    சாதி இரண்டொழிய வேறில்லை என்ற வரிகள் யாருடையவை?
--ஔவையார்
8.    சாம்போதும் தமிழ்படித்துச் சாதல்வேண்டும்என்றவர் யார்?
--இலங்கைக் கவிஞர் சச்சிதானந்தன்.
9.    தமிழில் தோன்றிய முதல் சிறுகதை எது?
--குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை (வ.வே.சுப்பிரமணியர்)
10. கண்ணதாசன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் எது?
--சேரமான் காதலி.
11. தீ இனிதுஎன்று பாடிய கவிஞர் யார்?
--பாரதியின் வசனகவிதை
12. புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்என்ற கவிஞர் யார்?
--அப்துல் ரகுமான்.
13. முகத்தில் பிறப்பதுண்டோ முட்டாளேஎன்ற கவிஞர் யார்?
--பாரதிதாசன்.
14. ஜெயகாந்தனின் எந்தச் சிறுகதை பின்னர் நாவலாக வளர்ந்தது?
--அக்னிப்பிரவேசம்.
15. பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் படிக்கப்போறேன்  என்றவர் யார்?
--பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
16. தன் மனைவியை இறைவனுக்காக விட்டுக்கொடுத்த நாயனார் யார்?
--இயற்பகை நாயனார்.
17. கடவுளும் கந்தசாமியும் சிறுகதை ஆசிரியர் யார்?
--புதுமைப்பித்தன்
18. கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்ட அண்ணாவின் நாவல் எது?
--குமரிக்கோட்டம்
19. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் யார்?
--கோபாலகிருஷ்ண பாரதி
20. பண்ணாய்வான் பசு எனப் புகழப்படும் இசைத்தமிழறிஞர் யார்?
--குடந்தை ப.சுந்தரேசனார்.
21. வள்ளலாரின் கீர்த்தனைகள் அருட்பா அல்ல, மருட்பா என்றவர் யார்?
--யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை
22. இருபத்துநாலாயிரம் நபிகளில் ஒரு பெண்நபிகூட இல்லையே? ஏன் வாப்பா யார் எழுதிய கவிதை?
--எச்.ஜி.ரசூல்
23. காவிய காலம்என்ற ஆய்வு நூலை எழுதியவர் யார்?
--வையாபுரியார்.
24. புதுக்கவிதை சொற்கள் கொண்டாடும் சுதந்திரதின விழா“ –என்றவர் யார்?
--வைரமுத்து
25.  “இரவில் வாங்கினோம், விடியவே இல்லை“ –என்ற கவிஞர் யார்?
 --சேலம் ம.அரங்கநாதன்

 
 மேலும் சில,
“உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ”என்று கூறியவர் யார்?
                       பட்டினத்தார்
“இன்னாதம்ம இவ்வுலகம் இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே” பாடிய புலவர் யார்?        பக்குடுக்கை நன்கணியார்
(“உண்டாலம்ம இவ்வுலகம்”  கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி)
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” வரிகள் இடம் பெற்ற நூல்கள்
               புறநானூறு, மணிமேகலை
தமிழில் விருத்தப்பாவில் எழுந்த முதல் காப்பியம்?   சீவகசிந்தாமணி
     ( கம்பராமாயணம் இல்லை)
ஐம்பெரும்காப்பியம் எனும் வழக்கை முதலில் கையாண்டவர்? மயிலை நாதர்
“ யான் பெற்ற பெரு பெருக இவ்வையகம்”, “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” எனக் கூறியவர்?
             திருமூலர்
“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்றவர்
             நாமக்கல் கவிஞர் ( பாரதிதாசன் இல்லை)
“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” வரி இடம்பெறும் நூல்?
              மனோன்மணியம்
“காக்கை விடு தூது” நூலாசிரியர் யார்? வெள்ளைவாரணர்

       என்னங்க நீங்க... நாங்க எடுக்குரதுக்கு முன்னாடியே நீங்க எடுத்துட்ரிங்க நீங்க ரொம்ப பாஸ்ட்...
இது வடிவேலு வசனம் தான்.  இப்படிதான் எதையும் கொஞ்சம் பிளான் பண்ணி தான் வினாக்கள் எடுக்கிறார்கள் போலும்.  இருந்தாலும் நாமும் கொஞ்சம் தெரிஞ்சுக்கூனும். 
      இப்பொழுதெல்லாம் இளைய தலைமுறை நிறைய கற்க விரும்புகிறது. போட்டித் தேர்வுகள் மிகவும் கடுமை ஆகின்றன.  தமிழ் நாட்டில் நடக்கின்ற குருப் ஒன்றுக்கான முதன்மைத் தேர்வுகளில் கூட தமிழுக்கு இடம் இல்லை. ஒரு வினா கூட கேட்கப் படுவதில்லை. இதெல்லாம் தமிழுக்கும் தமிழ் கற்கின்ற நம் மாணவர்களுக்கும் இழப்பே.  கவனிக்க வேண்டும் தேர்வாணையம்.  
      சரிங்க ரொம்ப நேரம் ஆய்டுச்சு. அப்பிடியே போறப்ப உங்களுக்கு ஒரு கேள்வி:  ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் நமக்குத் தெரியும். ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் இருக்கா?????????????????????????


திங்கள், 7 ஜூலை, 2014

குறுக்கங்களும் தருக்கங்களும்

        சார்பெழுத்துகளுள் ஐகார, ஒளகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள் உள்ளன. தொல்காப்பியர் நெறிப்படி குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றே சார்பெழுத்துகள்.  ஆனாலும், உரையாசிரியர்கல் ஆங்காங்கே கூறிய செய்திகளின் தொகையாகப் பவணந்தியார் காலத்தில் சார்பெழுத்துகள் எண்ணிக்கை பத்தாயின.  தொல்காப்பிய நூன்மரபு இயலின் ஒழிபே மொழிமரபு என்று சிவஞான முனிவர் கூறுவார். இந்தப் பதிவில் ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள் குறித்துப் பேசுவோம்.

      ஐகாரத்திற்கு அதாவது ஐ எனும் எழுத்திற்கு மாத்திரை இரண்டு.  ஆனால், இதே ஐ எனும் ஒலி மொழியில் இடம்பெறும் போது தன் மாத்திரையில் குறைகிறது.  மொழி முதலில் ஒன்றரை மாத்திரை. மொழி இடை, கடைகளில் ஒரு மாத்திரை. அதே போல ஒள தனியாக ஒலிக்கும் போது இரண்டு மாத்திரை. மொழி முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை. ஒள மொழி இடை கடைகளில் வராது. இந்த இலக்கணத்தைத் தமிழ் கற்ற அனைவரும் அறிவர்.

           “தற்சுட் டளபொழி ஐம்மூ வழியும்
            நையும் ஒளவும் முதலற் றாகும்”  (நன்னூல்)

       இந்த ஐகார, ஓலைகாரக் குறுக்கம் பற்றி வெளிப்படையாகத் தொல்காப்பியத்தில் இல்லை என்றாலும் நான் கல்லூரியில் பயின்ற போது எனது இலக்கண ஆசிரியர் நுண்ணிதின் கூறிய செய்தியைத் தற்போது பகிர்ந்து கொள்கிறேன். தொல்காப்பிய மொழி மரபு இயலில்,

           “ஐஒள   என்னும்  ஆயீ ரெழுத்திற்கு
           இகர   உகரம் இசைநிறை  வாகும்” (தொல்காப்பியம்)

எனும் நூற்பாவை நோக்குங்கள்.  இந்த நூற்பா அளபெடை விளக்கத்திற்குப் பின்வரும் நூற்பா. இதில் இருந்து ஐகாரக்குறுக்கம் பற்றியும் உயிரளபெடை பற்றியும் அறியலாம். முதலில் ‘இசைநிறைவாகும்’  என்றதால் இசைநிறை அளபெடை மட்டுமே கூறியுள்ளது புலனாகிறது. மற்றொன்று ஐகாரம் மொழியில் ( சொல்லில்) வந்தால் இசை நிறைவாக இராது என்பதும் புலனாகிறது. எனவே, ஐகாரம் குறுகுவதை இந்நூற்பா ஒருவாறு சுட்டுகிறது.  உயில அளபெடை வகைப்பாடுகள் பிற்காலத்தே எழுந்தவை. அதை வேறொரு பதிவில் காண்போம். சரி.  இந்த ஐ எவ்வளவு மாத்திரை குறுகுகிறது என்பதில் தெளிவு இல்லை. முன் கூறியவாறு நன்னூலில் மட்டுமே மொழி இடை, கடைகளில் குறுகுகிறது என்பதை அறிகிறோம். நன்னூலுக்கு முந்தைய நூலான யாப்பருங்கலம் ஐகார ஒளகாரத்திற்குச் சொல்லும் விளக்கம்,

   “ ஐகார ஒளகாரக் குறுக்கம் ஆமாறு:  அளபெடுத்தற் கண்ணும் தனியே சொல்லுதற் கண்ணும் என இரண்டிடத்தும் அல்லாத வழி வந்த ஐகார, ஓளகாரம் என்பன தம் அளவில் சுருங்கி ஒன்றரை மாத்திரையாம். ஐகாரம் தனியே நின்று ஒரோவிடத்து ஒருபொருளைச் சொல்லுதற்கண் ஒன்றரை மாத்திரையாம். என்னை?
    “அளபெடை தனிஇரண்டு அல்வழி ஐஒள
     உளதாம் ஒன்றரை தனியும் ஐ ஆகும்”
என்றார் அவிநயனார்”  எனக் கூறுகிறது.

      இந்த உரையில் இரண்டு விசயங்கள் உள்ளன.  ஐகாரம் போலவே ஒள மூவிடங்களில் வரும் என்பதும், ஐ, ஒள தனியே நின்று பொருள் உணர்த்தி வரும் போது ஒன்றரை மாத்திரை என்பதும் ஆகும்.
 
      ஒளகாரம் மொழிக் கடையில் வருவதற்குச் சான்றுகள் ஏற்புடையதாக இல்லை. அவை:  சிறுதலை நெளவி மான்,  நறுமலர் வெளவினர்.    இவை எப்படிச் சொல்லாகும்?  சொற்றொடர் அல்லவா?

      சூ ......அடடடா.....இப்பவே கண்ணக் கட்டுதே.....என்று கூறுகிறீர்களா?  

   அஇ – ஐ ,  அய் – ஐ .  ஆனால் அகர ஒலியுடன் ஆய்தம் சேர்ந்து ஐ ஒலியை உருவாக்குகின்றதாம்!  

    கண்டுபிடி அதனைக் கண்டுபிடி! குட்டையைக் குழப்பிட்டுப் போறவனைக் கண்டுபிடி......சந்திப்போமா!


>